திருகோணமலை – மூதூர் இருதயபுரம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து மயக்கமுற்ற நிலையில் நேற்று சனிக்கிழமை பெண்ணொருவர் மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான அரியநாயகம் வனிதாதேவி (32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த பெண்ணைக் காணவில்லையென அவரது வீட்டுக்கு சென்ற அயலவர்கள், அவர் மயக்க முற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அவரை மூதூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விஷம் அருந்திய காரணத்தினாலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






