ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்ற பெண் : சீனாவில் பரபரப்புச் சம்பவம்!!

610

11

சீனாவில் இளம் பெண் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பீஜிங் விமான நிலையத்தில் விறுவிறுவென வந்த ஜோடி ஒன்று குறிப்பிட்ட எண் விமானத்தில் செல்ல வேண்டும், தங்களை அனுமதிக்க வேண்டும் என அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் குறிப்பிட்ட விமானம் புறப்பட தயாரான நிலையிலும், அவர்கள் உரிய நேரத்திற்கும் மிகவும் தாமதமாக வந்திருப்பதாலும், அந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்ற அந்த ஜோடி விமான ஓடுதளத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாதிட்டுள்ளது. மட்டுமின்றி புறப்படவிருந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி தங்களை அந்த விமானத்தில் செல்ல அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே அந்த இருவரும் திடீரென்று விமான ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றுள்ளனர். இதில் குறிப்பிட்ட பெண் புறப்படத்தயாரான நிலையில் இருந்த விமானத்தின் மிக அருகே சென்று விமானத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.

இந்த களேபரங்களுக்கு இடையே விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்மணியையும் அவரது கணவனையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் கைது செய்துள்ளனர்.

ஷாங்காய் செல்லும் அந்த விமானம் இச்சம்பவத்தினால் 20 நிமிடங்கள் தாமதமாக பீஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

விமான ஓடுதளத்தில் புகுந்து அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த ஜோடியை பொலிசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

12