தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் : அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்!!

388

selvan

அநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரச கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தம்மை விடுதலை செய்யுமாறுகோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசினதும் மனித உரிமை அமைப்புகளினதும் கவனத்துக்கு தமது கோரிக்கைகளை கொண்டுவரும் நோக்கிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

எனவே இந்த விடயத்தை மனிதாபிமான முறையில் அணுகி அவர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.



இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.