சதுரங்க வேட்டை படத்தின் 2 ஆம் பாகத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.
நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டை. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
சதுரங்க வேட்டை படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.
இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் கதை, திரைக்கதை மற்றும் வசனம் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் இயக்குநர் வினோத்.
இக்கதையின் நாயகனாக அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். மனோபாலா தயாரிக்க இருக்கிறார்.
‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
அஷ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எப்படி நகர வாழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வினோத்.