வவுனியா மன்னார் வீதி பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று (24.09.2016) நண்பகல் 1.30 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் தீப்பரம்பலை அவதானித்த அருகில் வசிக்கும் மக்கள் தீயணைப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயணைப்புப் படையினருடன் இணைத்து வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜகுரு தலைமையிலான குழுவினரும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதே போன்று சில வாரங்களுக்கு முன்னரும் இங்கு தீப்பரவல் இடம்பெற்றதுடன் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
வவுனியாவில் கடும் வெப்பமான சூழ்நிலை நிலவுவதால் இச் சம்பவம் இயற்கையாக நிகழ்ந்ததா அல்லது சதி வேலையா என பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















