வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மிகத் தீவிரமான கோரிக்கைகளுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரன்தம்பேயில் நேற்று (25.09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள சந்தர்ப்பத்தில் அதனை குழப்பும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று முந்தினம் (24) மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் வடபகுதி மக்களின் மனோநிலையை தேவையற்ற விதத்தில் குழப்பும் வகையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் வடக்கு பகுதி பிரதிநிதிகளின் தீவிர கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.






