எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து மீளாத் துயில் கொள்ளும் நண்பர் அமரர்பிரதி அவைத் தலைவர் அன்டனிஜெகநாதனின் இழப்பினால் துன்பமுற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் முல்லை வாழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்குமாகானசபை உறுப்பினர் இ.இந்திரராசா இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் வன்னிப் பெருநிலப்பரப்பு வாழ் மக்களின் தேவைகளுக்காகவும் நின்று நிதானித்து உழைத்தவர் அமரர் அவர்கள்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்த இவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் ஏன் அரசியல் வாழ்க்கை அனைத்திலும் வெற்றி பெற்றவராகவே நான் பார்க்கிறேன்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பழகுவதற்கு இனியவர். மற்றவர்களுக்கு உதவும் பண்புடையவர், ஏனையவர்களின் இன்ப துன்பங்களில் தவறாது பங்கெடுப்பவர் ,முல்லை மண்ணிலே இவரின் தொழில் வாழ்வின் சிறப்புக்களை சேவைகளை இன்றும் நினைவு கூரக்கூடியதாகவுள்ளது.
ஆசிரியராக ஆளுமை மிக்க நல்லதிபராக கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இவர் முல்லை மண்ணிற்கு ஆற்றிய கல்விப் பணிகளும் முன்மாதிரிகளும் காலத்தால் அழியாதவை.
கல்வி சமூகப் பணிகளில் மட்டுமன்றி இவர் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவே காணப்பட்டார். வடக்கிலே நீண்ட கால இடைவெளிக்குப் பின் நடாத்தப்பட்ட மகாண சபைத் தேர்தலில் முல்லை மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு வடமாகாண சபையின் முதலாவது பிரதி அவைத் தலைவர் பதவியைப் பெற்று முல்லை மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்.
மாணசபை அமர்வுகளிலும் சரி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டங்களிலும் சரி இவரின் பிரசன்னமும் குரலும் தமிழ் மக்களின் குரலாக மட்டுமன்றி முல்லை மக்களின் குரலாகவும் ஓங்கி ஓலித்த வண்ணமுமே இருக்கும்.
காலம் இடம் தேவை அறிந்து தனது கருத்துக்களை துணிவாகவும் தெளிவாகவும் எவர் முன்னிலையிலும் தெரிவிப்பவர்.
தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்து அரசியல் பணியாற்றிய இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளும் இடைவெளிகளும் ஏற்படுகின்ற போதெல்லாம் மக்களின் நலன் கருதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்காக உழைத்த பெருமைக்குரியவர்.
சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவுகளின் போதும் முள்ளிவாய்க்காலில் யுத்தப் பேரவலங்களை மக்கள் எதிர் நோக்கி போதும் மக்கள் மீள்குடியேறிய போதெல்லாம் இவர் ஆற்றிய உதவிகளும் பணிகளும் இன்றும் நினைவு கூரப்பட வேண்டியவையாகும்.
இத்தகைய பல்துறைப் பணிகளை ஆற்றிய அன்னாரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன். என அன்டனி ஜெகநாதனின் இரங்கல் செய்தியில் வடக்குமாகானசபை உறுப்பினர் இ.இந்திரராசா மேலும் தெரிவித்துள்ளார்.






