மாகாணசபை கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவுச்சங்கத்தின் ஆளுனர்சபை உறுப்பினர்கள், சங்கத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திவிட வேண்டிய பாரிய பொறுப்பு எம்முன்னே உள்ளது.
அந்தவகையில் வவுனியா சிக்கன கூட்டுறவுச்சங்கம் பலசேவைகளை சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு வழங்கிவருகின்றது. அதன் ஒருபகுதியாகவே எனது மாகாண நிதியொதுக்கீட்டில் கூட்டுறவுச்சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இன்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.
கொடியயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. அவர்களின் உடனடித்தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாணவேண்டிய பாரிய பொறுப்பு இந்த மாகாண சபையிடமுள்ளது.
அதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை. அவற்றை தீர்பதற்கான பணியை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துகொள்ளவேண்டும். மாகாண சபை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதைவிடுத்து வெறும் உணர்ச்சி பேச்சுகளால் தீர்வினை எட்டிவிடமுடியாது என்றார்.









