திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர், தனது மகளை காதலித்து வந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
லட்சுமண பெருமாளின் மகள் கஸ்தூரி என்பவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
கஸ்தூரியும், சிவகுருநாதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர், இந்த காதல் விவகாரம் கஸ்தூரியின் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து, அவரை பணிக்கு செல்ல வேண்டாம் என அவரது வீட்டில் கூறியுள்ளனர்.
மேலும், தனி அறையில் அடைத்துவைத்துள்ளனர். இதனை அறிந்த சிவகுருநாதன் கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.
ஆனால், ஜாதியை காரணம் காட்டி இந்த திருமணத்திற்கு கஸ்தூரியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார், மேலும் தனது மகளை மறந்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சாதுர்யமாகப் பேசிய லட்சுமணபெருமாள், அருகேயுள்ள கோயிலுக்கு சிவகுருநாதனை அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவகுருநாதனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அரிவாளுடன் லட்சுமண பெருமாள், தேவர்குளம் காவல்நிலையம் சென்று சரண் அடைந்தார்.
அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், மாற்று திறனாளியான என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. மனைவி பீடி சுற்றி வந்தார். மகன் சிவநேசன், ஆய்வக தொழில்நுட்ப படிப்பு படித்து நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். கஸ்தூரியை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்தேன்.
அவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த நான் அவரை கண்டித்தேன். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை இதனால் இவ்வாறு செய்தேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது, இதுகுறித்து பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.