திருவள்ளூர் மாவட்டத்தில் செல்லக்கடி கடித்ததற்காக 3 வயது குழந்தையை தாய்மாமனே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு ஹேமந்த் என்ற 3 வயது ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், ஹேமலாவின் சகோதரரான தமிழ்செல்வன் என்பவர் முதுகலை பட்டம் படித்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்செல்வன் தினமும் தனது அக்கா மகன் ஹேமந்த் உடன் விளையாடுவது வழக்கம்.
அது போல விளையாடிக் கொண்டிருக்கையில், செல்லமாக ஹேமந்த் தமிழ்செல்வனை அடிக்கவும், கடிக்கவும் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் ஹேமந்தை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதனையடுத்து, நேற்றிரவு ஹேமந்த் தூங்கி கொண்டு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாமல் நைசாக வீட்டிலிருந்து தூக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.
அங்கு கை, கால்களை கட்டியதோடு ஹேமந்த்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கழிவு நீர் தொட்டியில் போட்டுள்ளார்.
காலையில் குழந்தையை காணாமல் அனைவரும் தேடியபோது, தமிழ்செல்வனும் ஒன்றும் தெரியாதது போல் அவர்களுடன் சேர்ந்து தேடியுள்ளார்.
உடனடியாக பெற்றோர்கள் பெரியபாளையம் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை தேடியுள்ளனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் குழந்தையை கண்டுபிடித்துள்ளனர், தொடர்ந்து அனைவரிடமும் விசாரணை நடத்தியதில் தமிழ்செல்வன் பதிலில் பொலிசுக்கு திருப்தியில்லாமல் இருந்தது.
இவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






