ஹெய்ட்டி நாட்டை மெத்யூ என்ற புயல் தாக்கியதில் நேற்று காலை நிலவரப்படி 478 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவில் பலி எண்ணிக்கை 842 ஆக அதிகரித்து உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடலில் உருவான ‘மெத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹெய்ட்டி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹெய்ட்டியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக அந்நாட்டில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல்-மழைக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. தெருக்களில் காணும் இடமெல்லாம் பிணக்குவியலாக காட்சி அளிக்கிறது.
மீட்பு பணியின்போது மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஹெய்ட்டியில் மட்டும் மேத்யூ புயல் மற்றும் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 842 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.