அதிகரித்து வரும் இணையதள விளையாட்டு மோகம் : சீனா மேற்கொண்ட அதிரடி முடிவு!!

250

china

சிறுவர்களிடையே இணையதள மோகத்தைக் குறைக்கும் நோக்கில் நடுநிசிக்குப் பிறகு இணையதள விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க சீன அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

சீனாவில் சுமார் 75 கோடி பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையதளத்தை பொழுதுபோக்கு சேவைகளுக்கும், ஆன்லைன் விளையாட்டுகளுக்குமே பயன்படுத்துவதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றது.

இவர்களில் 23 சதவீதம் பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சீன இணையதள பயன்பாடு குறித்த அரசின் தகவலறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால், 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்கள் தடை செய்ய வேண்டி வரும்.

இந்த சட்ட நடைமுறை குறித்து இம்மாத இறுதிவரை மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன்பின்னர், இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசின் இந்த முடிவிற்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.