இலங்கையில் விரைவில் மின்சார தடை ஏற்படும் அபாயம்!!

475

power-cut

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலையே இதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு மழை கிடைக்காமையினால் நீர்மட்டங்கள் விரைவாக குறைவடைந்து வருகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும் என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் மக்களை நெருக்கடிக்குள் சிக்க வைக்காமல் முடிந்த வரையில் மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார நெருக்கடி ஏற்பட்டாலும் இல்லை என்றாலும் முடிந்த அளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை அடுத்து வரும் சில நாட்களில் வறட்சியான காலநிலை விலகி, மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.