ஆந்திர மாநிலத்தில் 103 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
1910ம் ஆண்டு சஹீராபாத்தில் பிறந்தவர் மணிக்யம். தற்போது 103 வயதாகும் இவர் கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். மணிக்யமிற்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மணிக்யம் வீதியில் சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று துரத்தியதில் கீழே விழுந்து இடுப்பில் அடிபட்டுள்ளது.
அவரைப் பரிசோதித்த செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அவரது இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
103 வயதான அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதே மிகவும் சவாலான காரியமாக இருந்தபோதும் கட்டாயம் அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அவரது உடல்நிலை.
மணிக்யத்தின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மருத்துவர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று, அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு மணிக்யத்திற்கு லேசான ரத்த அழுத்தம், கண்பார்வைக் கோளாறு தவிர உடல் கோளாறு எதுவும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர்கள் அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.