முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மீண்டும் சிகிச்சை!!

613

jeyal

முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டனைச் சேர்ந்த மருத்துவரும், எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களும் வியாழக்கிழமை மீண்டும் சிகிச்சை அளித்தனர்.

உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்ட் பீலே செப்டம்பர் 30ம் தேதி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.

அவர் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அப்பல்லோ மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை நடத்தினார்.

மேலும் முதல்வருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளோடு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளையும் கூடுதலாகப் பரிந்துரைத்தார்.

எய்ம்ஸ்’ நிபுணர்கள்: இதைத்தொடர்ந்து, டில்லி “எய்ம்ஸ்’ மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி, மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இருதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் அடங்கிய குழுவினர் அக்டோபர் 5ம் தேதி மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்வருக்கு ஏற்கனவே காணப்பட்ட சர்க்கரை நோய், குளிர்கால மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனை தகவல்: தொடர் சிகிச்சையின் காரணமாக முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், அவருக்குத் தேவையான சுவாசத்துக்கு ஆதரவு அளிக்கும் சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், ஊட்டச்சத்து, உடல் இயக்கமற்ற இயன்முறை மருத்துவம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

3வது முறையாக நிபுணர்கள்: இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே 3வது முறையாக வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் முதல்வரின் உடல்நிலையை ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் மேலும் சில நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவும் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்த சிறப்பு நிபுணர்கள் குழுவினரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

நீத்தா அம்பானி வருகை: முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்களிடம் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் மாலை 6.55 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரனும் வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

– தினமணி-