மத்திய அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் திரைப்பட விழா இயக்குனரகம், நவதர்சன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தியத் திரைப்பட விழா-2013 என்ற நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள முருகா திரையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 2012ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளும் வழங்கப்படவிருக்கிறது. இதில் புதுவை முதலமைச்சர் ந.ரங்கசாமி கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைப்பதோடு விருது வழங்கியும் சிறப்புரையாற்றவுள்ளார்.
இவ்விழாவில் 2012ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது விமல், இனியா நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த வாகை சூடவா படத்திற்கு கிடைத்துள்ளது. இதற்காக அப்படத்தின் இயக்குனர் எ.சற்குணத்திற்கு 1 லட்சம் ரூபாய் பரிசு பணமும், வெள்ளி கேடயமும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து இயக்குனர் சற்குணம் கூறும்போது வாகை சூடவா சிறந்த திரைப்படத்திற்காக புதுச்சேரி அரசின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.