அனுராதபுரம் விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த நபர், சிறையறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
தான் உடுத்தியிருந்த உடையை பயன்படுத்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ள இந்த நபரை சிறைச்சாலை அதிகாரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான இந்த நபர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது. சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சிரமதான பணிக்காக கண்டி தும்பர போகம்பர சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை மற்றும் கோஹாகொட பிரதேசங்களை சேர்ந்த இந்த கைதிகள் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தப்பியோடி இந்த கைதிகள் இன்னும் சிறிது காலத்தில் விடுதலை செய்யப்படவிருந்தனர்.
தப்பியோடிய கைதிகளை தேடும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை அதிகாரிகளும், கண்டி பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.






