சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற வேண்டும் : கங்குலி!!

396

sachin

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200வது டெஸ்ட்டில் விளையாடி புதிய மைல்கல் சாதனையை படைக்க உள்ளார்.

இதற்காக இந்திய அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும்போது அவர் 200வது போட்டியில் விளையாடும்படி அட்டவணை இருந்தது. ஆனால், தற்போது சச்சின் 200வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாட இந்திய கிரிக்கெட் சபை விரும்பியது.

இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டது. இதை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாடுகிறார். ஆனால் எந்த மைதானத்தில் விளையாடுவார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுழற்சி முறையில் பெங்களூர், அகமதாபாத்தில் போட்டி நடைபெற வேண்டும்.

இந்நிலையில் டெண்டுல்கரின் சொந்த மண்ணான மும்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் டெண்டுல்கர் தனது 200வது போட்டியை மும்பையில் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். அங்குதான் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிகம் உள்ளனர்.

மும்பைதான் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அவர் இந்த பொன்னான வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும்.

டெண்டுல்கரின் ஓய்வுக்கு பின்பு அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும். நாம் நிறைய வீரர்களின் ஓய்வை பார்த்து இருக்கிறோம். பல வீரர்கள் வருவார்கள் போவார்கள் என்று கூறினார்.