நடிகர் விஜயின் தலைவா படம் சர்ச்சைகளில் சிக்கி பிறகு ரிலீசானது. தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது. இதில் மூன்று அணிகள் மோதுகின்றன. இதில் ஒரு அணியை தான் ஆதரிப்பதாக வதந்திகள் பரவியுள்ளன என்றும் எந்த அணியையும் நான் ஆதரிக்க வில்லை என்றும் விஜய் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..
நான் ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அணியை நான் ஆதரிப்பதாக வதந்தி பரவியுள்ளது. பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட வண்ணம் உள்ளனர். நான் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டு அணிகளிலும் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் உள்ளனர். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நான் பொதுவானவன். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.