மட்டக்களப்பில் விபச்சார நிலையம் முற்றுகை : ஏழு பேர் கைது!!

452

 
மட்டக்களப்பு நகரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறைகள் வாடகைக்கு விடப்படும் என்ற பெயரில் முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரப் பகுதியில் வைத்து இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் பிரபாகரன் ஆகியோரும் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கும் விடுதி என்ற பெயரில் மட்டக்களப்பு நகரில் விபச்சாரங்கள் நடைபெற்று வருவதாக அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் நடைபெறும் விபச்சார நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பணிப்புரைகள் வழங்கியிருந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக 2008 தொடக்கம் 2013வரையில் முதல்வராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

11 13 14