யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று ( 24.10.2016) காலை 10.00மணி முதல் 12.00 மணிவரை யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப்பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும், கொலையை விபத்தாகக்காட்ட முனைந்தமைக்கான பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள் இவ்வழக்கின் நீதி விசாரணையை முழமையாக அவதானிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.