மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்ததால், விக்கெட் கம்பால் தாக்கி மகனை கொலை செய்த தந்தை மற்றும் தாயை பொலிஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மறைமலைநகர், கரும்பூரை சேர்ந்தவர் செல் வம் (50). தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர். இவரது மனைவி மோகனா.
இவர்களுக்கு ஒரு மகள், சுரேஷ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். திருமணமாகவில்லை. மகள் திருமணமாகி பெருங்களத்தூரில் வசித்து வருகிறார்.
தந்தை, மகன் இருவரும் குடிப்பழக்கம் உடையவர்கள். இருவரும் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், பெருங்களத்தூரில் உள்ள மகள் வீட்டுக்குச் செல்வம், மோகனா கடந்தவாரம் திங்கட்கிழமை சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது மகன் சுரேஷ்குமார் இரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து தந்தையும், தாயும் கதறி அழுதனர். இதுகுறித்து உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சுரேஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் இல்லையெனவும் கொலை செய்ததற்கான அடையாளம்தான் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தந்தை செல்வம், தாய் மோகனாவிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்துள்ளனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு தந்தை செல்வத்துக்கும், மகன் சுரேஷ்குமாருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டது.
அப்போது மகன் சுரேஷ்குமாரிடம் வேலைக்கு சென்று சம்பளம் தருவதில்லை, ஆனால் தினமும் குடித்து விட்டு சுற்றுகிறாயே என தந்தை செல்வம் கேட்டுள்ளார். இதையடுத்து பணம் தரமுடியாது என்று கூறிய, தந்தையை சுரேஷ்குமார் கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சுரேஷ்குமார் இரு முறை கட்டையால் தந்தை செல்வத்தை தாக்கி கை, கால்களை உடைத்துள்ளார். இதனால், தற்போதும் ஏதாவது செய்து விட போகிறான் என பயந்து, தனது மனைவி மோகனாவை அழைத்து கொண்டு பெருங்களத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் நள்ளிரவில் செல்வம் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது மகன் சுரேஷ்குமார் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்தார். அவரை பார்த்து ஆத்திரமடைந்த செல்வம், வீட்டுக்குள் கிடந்த விக்கெட் கம்பால் சுரேஷ்குமாரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே, கொலையை மறைக்க பெருங்களத்தூரில் உள்ள மகள் சூர்யா வீட்டுக்கு சென்று தனது மனைவி மோகனாவிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார்.
இதை மறைக்க நாம் இருவரும் காலை வீட்டுக்கு செல்லலாம் எனவும் கூறியுள்ளார். அதன்படி, இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். கொலை யை மறைக்க மகன் இறந்து விட்டான் என்று உறவினருக்கும், மகனை யாரோ கொலை செய்து விட்டனர் என பொலிஸாருக்கும் அழுது கொண்டே மாறி மாறி தகவல் கூறியது தெரியவந்தது.
குடிகார மகன் தான் இறந்து விட்டான். கணவனையாவது காப்பாற்றுவோம் என மனைவி மோகனாவும், கணவனுடன் சேர்ந்து உறவினர்களிடம், பொலிஸாரிடமும் பொய் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.






