வவுனியாவில் விஷம் தீண்டி குடும்பப் பெண் உயிரிழப்பு!!

399

lady

வவுனியா புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புளியங்குளம் அனந்தப்புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் தனது வீட்டிலுள்ள வீட்டுத்தோட்ட வளவில் கடந்த 20.10.2016 காலை 8.30 மணியளவில் கத்தரிக்காய் பறிப்பதற்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் அருகில் வசித்து வந்த தனது உறவினரிடம் தனக்கு கத்தரிக்காய் பறிக்கும்போது பாம்பு கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். உறவினரின் உதவியுடன் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் பரிசோதனையை அடுத்து அவசர சிகிச்சைப்பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நோயாளரில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து அன்றைய தினமே அதிதீவிர சிகிச்சைப்பிரிவிற்கு உடனடியாக மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

சுயநினைவற்ற நிலையிலிருந்த குடும்பப்பெண்ணிற்கு தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளிவில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை மரண விசாரணையினை மேற்கொண்ட நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விஷப்பாம்பு கடித்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து; சடலத்தினை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.