வவுனியா மதீனாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதியைவிட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இதையடுத்து உதவிக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர் மீது பூந்தோட்டம் பகுதியிலிருந்து சென்ற இளைஞர் குழுவினர் குறித்த முஸ்லீம் நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அது கைகலப்பாக மாறியது. இதனால் காயமடைந்த மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தையடுத்து பூந்தோட்டம், மதீனாநகர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது, நேற்றைய தினம் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பூந்தோட்டம் மதீனாநகர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 20,22,23 வயதுடைய தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியாவில் கற்குழி, பம்பைமடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் இளைஞர்களிடையே மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மோதல்களுக்கு காரணம் தீபாவளி தினமான நேற்று இளைஞர்கள் மது அருந்திவிட்டு குழுக்களாக தேவையற்ற தகராற்றில் ஈடுபட்டமையாகும்.