அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அமைதியாக இருக்க மாட்டோம் என்று சிரியா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவுக்கான சிரியா நாட்டுத்தூதர் ரியாத் காமல் அப்பாஸ் டில்லியில் நேற்று அளித்த செவ்வியில் தெரிவித்தாவது..
சிரியாவில் நடந்து வரும் சம்பவங்களின் நோக்கமானது அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்துவதோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதோ அல்ல. அதிபர் பஷார் அல் அஸாதின் ஆட்சியை அகற்ற அமெரிக்கா செய்து வரும் சதியாகும்.
நாங்கள் அமெரிக்கக் கொள்கையை விரும்பவில்லை. போராடி எங்கள் மக்களைக் காப்போம். எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களின் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா விரும்பும் ஒரே விஷயம் எண்ணெய் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு ஆகியவைதான்.
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதைக் கண்டறிய நேரில் வந்து பார்க்குமாறு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் ஆதாரம் காட்டுமாறு அமெரிக்காவுக்கு சவால் விடுக்கிறேன்.
ஈராக் விஷயத்திலும் இதே பொய்யைத்தான் அமெரிக்கா கூறியது.
10 ஆண்டுகளுக்குப் பின் அது தவறு என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது என்று ரியாத் காமல் அப்பாஸ் கூறினார்.