வவுனியா காட்டுப்பகுதியில் இருந்த சந்திரவட்டகல் ஒன்று கிளறப்பட்டு அதன் கீழிருந்த மன்னர் காலத்து பொற்காசுகள் களவாடப்படுள்ளன என சந்தேகிக்கப்படுகின்றது என வவுனியா ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பாலமோட்டை பறையாளங்குளம் காட்டுப்பகுதியில் மன்னர்கள் வாழ்ந்த பகுதி எனக் கருதப்படும் பகுதியில் சந்திரவட்டக்கல் ஒன்று உள்ளது. அதன் கீழ் ஆழமாகத் தோண்டப்பட்டு கிடங்கில் இருந்த பொற்காசுகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதையல் தோண்டியவர்கள் தான் இந்த காரியத்தினை செய்திருக்க முடியும். இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள காணி தனியார் ஒருவருக்கு கடந்த 80 ஆண்டுகளுக்கு மேல் சொந்தமாக இருந்துள்ளது.
இந்தப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் ஆய்வாளர்களும் வந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். சில காலங்களின் பின்னர் இராணு வம் விலகிச் சென்றது. இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதையல் தோண்டப்பட்டு கோடிக்கணக்கான பெறுமதியான பொற்காசுகள் எடுக்கப்பட்டுள்ளன. என்று அந்தப்பகுதியினை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
புதையல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட பாலமோட்டை பறையாளங்குளம் காட்டுப்பகுதியிலே பல ஆண்டுகளாக இருந்த சந்திரவட்டக்கல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கிளறப்பட்டுள்ளது. அந்த சந்திரவட்டக்கல்லின் கீழே ஆழமான கிடங்கு ஒன்று காணப்படுகின்றது.
கிடங்கில் உடைந்த நிலையில் மன்னர் காலத்து மண்பாணை ஒன்று காணப்படுகின்றது. இந்த பாணையில் பொற்காசுகள் இருந்திருக்கலாம் எனவே தான் இது உடைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அத்தோடு இறந்தவர்களை அடக்கம் செய்த கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.