ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமிஜெக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார், சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.
சென்னையில் பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து, அதனுள் பல முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசீகரன், சிட்டி ஆகிய கதாபாத்திரங்களைத் தொடர்ந்து மற்றொரு வில்லன் கதாபாத்திரத்திலும் ரஜினி நடித்திருக்கிறார். ‘எந்திரன்’ படத்தில் இறந்த வில்லனின் மகனாக சுதன்ஷூ பாண்டே நடித்திருக்கிறார்.
அவரிடம் தீமையான சிட்டி ரோபோவின் CODE-களை வைத்து புதிதாக ஒரு ரோபோவை உருவாக்கிறார். அக்ஷய்குமாரும் இப்படத்தில் ஒரு தீய விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
அவருடைய பாத்திர படைப்பு ரசிகர்களுக்கு புதிதாக இருக்குமாம். பெரிய வடிவிலான அனிமேட்ரானிக்ஸ் பறவைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அக்ஷய்குமாருடன் இடம்பெற்று இருக்கிறது.
படத்தின் இறுதிகாட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.
தீமையான சிட்டி மற்றும் அக்ஷய்குமார் இருவரையும், ரஜினி தான் உருவாக்கி இருக்கும் நல்ல ரோபோவை வைத்து எப்படி அழிக்கிறார் என்பதைத் தான் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் ஷங்கர்.
மேலும், இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம்பெற இருக்கிறது. ஆனால், படத்தின் அல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற இருக்கிறது.