வாடகைக்கு வீடு தேடிச் சென்ற பெண்ணின் கணவரின் கை, கால்களை கட்டிப்போட்டு 8 பேர் கொண்ட கும்பலால் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளான சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது. இதனிடையே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மும்பை ஜோகேஷ்வரி கிழக்கு, அம்போலியில் குடிசைப் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கணவர், மாமனார், மாமியார் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். தற்போது அவர்கள் வசித்து வந்த குடிசை வீட்டின் வாடகை ஒப்பந்தம் முடிய உள்ளதையடுத்து அந்த பெண் தனது கணவருடன் வேறொரு வீடு தேடிச் சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன், மனைவி இருவரும் அருகிலுள்ள ஷாம் நகர் குடிசை பகுதியில் வீட்டு தரகரான மூதாட்டி ஒருவரின் உதவியுடன் வாடகை வீடு தேடியுள்ளனர்.
இரவு வெகுநேரமாகி விட்டதால் மூதாட்டி இருவரையும் அங்கு காலியாக இருக்கும் அவரது வீட்டில் தங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதையடுத்து தம்பதி இருவரும் அந்த வீட்டில் தங்கியுள்ளனர்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த குறித்த பகுதியைச் சேர்ந்த 8 இளைஞர்கள், அனைவரும் உறங்கிய பின்னர் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். சத்தம் கேட்டு கணவர், மனைவி இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது குறித்த இளைஞர்கள் இளம்பெண்ணின் கணவரை அடித்து உதைத்து கை, கால்களை கட்டி போட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அப்பெண்ணை மாறி, மாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். கணவர் கண்முன்னேயே மனைவியை 8 பேரும் அதிகாலை 2 மணிவரை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அம்போலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர். மேலும் கணவரின் கை, கால் கட்டுகளை அவிழ்த்துள்ளனர்.
மேலும் இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் மூதாட்டி அம்போலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய 7 இளைஞர்களை அதிகாலை 5 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான எட்டாவது நபர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
கைதான 8 பேரும் 22 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களாவர். பின் னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.
8 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள இளைஞர்களின் பெற்றோர். சம்பவத்தில் தங்களது மகன்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.