பாடசாலையில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட 13 வயது மாணவி!!

299

letisha-reimer

கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் உள்ள மேல்நிலை பாடசாலை ஒன்றில் Letisha Reimer என்ற 13 வயது மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார். மாலை நேரத்தில் பாடசாலை முடிவடையும் நேரத்தில் திடீரென உள்ளே ஒரு நபர் நுழைந்துள்ளார்.

அப்போது, பாடசாலை விட்டு வெளியே செல்ல முயன்ற மாணவியை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். மேலும், அவரது தோழிக்கும் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் 13 வயதான சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தாக்குதல் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியபோது Gabriel Klein(21) என்ற வாலிபரை கைது செய்தனர்.

மேலும், மாணவியை தாக்கியது இவர் தான் எனவும், இத்தாக்குதல் திட்டமிடப்பட்டு நிகழவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பாடசாலையில் உயிரிழந்த மாணவிக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மாணவியின் குடும்பத்திற்காக சுமார் 10,000 டொலர் வரை நிதி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.