ஆந்திர மாநிலத்தில் தந்தை இறந்ததாக கூறி 89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர் ராவ் என்பவர், மஸ்கட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுதாகர் மருந்தாளுனராக ஐதராபாத்தில் வேலை செய்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய தந்தை இறந்ததாக கூறி, ஐதராபாத்தை அடுத்த கர்கானாவில் உள்ள வீட்டை 89 லட்சத்திற்கு அடகு வைக்க திட்டமிட்டார்.
இதற்காக தனது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து போலியாக தந்தையின் இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். பின்னர் மேக்மா என்ற நிதி நிறுவனத்தில் சான்றிதழை சமர்பித்து, பணம் பெற முயற்சித்தார். ஆனால் அவர்கள் தவணையாக மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வெங்கடேஸ்வர் ராவ், ஐதராபாத் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். தகவலறிந்து காவல்துறையினர் சுதாகரை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பான விசாரணையில், வெங்கடேஸ்வர் ராவிற்கு இரு மனைவிகள் இருப்பது தெரியவந்தது. அதனால் 5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தன் கையை விட்டு போய் விடும் என்று அச்சம் அடைந்ததால், சுதாகர் இந்த மோசடியில் ஈடுபட முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.