வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00 மணியளவில் நான்கு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று (08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்த போது நான்கு எறிகணைகளைக் கண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு அறிவித்தமையினையடுத்து கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் எறிகணைகளை செயழிலப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் இக் காணியில் இருந்ததாகவும் அவர்கள் காணியினை விட்டு வெளியேறிய பின்னரே காணி உரிமையாளர் காணியினை சுத்தம் செய்யும் போது இவ் எறிகணைகளைக் கண்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.