மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடற்பன்றி ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
கடற் பன்றியானது இலங்கையில் பரவலாகக் காணமுடியாததொரு அரிய வகை உயிரினமொன்று என அவர் தெரிவித்துள்ளார். இக்கடற்பன்றி சுமார் ஐந்து அடி நீளமானதெனவும் 450 – 500 கிலோ வரையான நிறையை கொண்டதெனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்பிரதேசங்களில் இவ்வகையான கடற்பன்றிகள் மிகவும் அரிதாகவே காணக்கூடியதாகவுள்ள அதேவேளை, இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் இவ்வகையான 7-8 வரையான கடற்பன்றிகள் காணப்படலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள கடற்பன்றியின் உடலில் பெரியளவில் காயங்கள் காணப்படுவதாகவும், சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டைனமைட் வெடியில் சிக்குண்டு இந்த உயிரினம் உயிரிழந்திருக்கலாம் எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
‘இலங்கையின் கடல் எல்லைக்குள் வசிக்கும் இவ்வகையான உயிரினங்களின் எண்ணிக்கை சரியாகக் கணிப்பிடப்படவில்லை. இவைகள் பெரும்பாலும் தாவர உண்ணிகளாகவே காணப்படுகின்றன. அத்துடன் இவ்வகையான உயிரினங்கள் அருகிவரும் இனத்தைச் சார்ந்தனவாகும்.
இவை மிகவும் விரைவாக அழிவுக்குள்ளாகின்றன. கடந்தகாலங்களிலும் இதேபோன்று, மீனவர்களின் அறியாமையின் காரணமாக இரு கடற்பன்றிகள் கொல்லப்பட்டிருந்தன.
இனிவரும் காலங்களில் தாம் இவ்வகையான அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கென கடற்படையினருடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்று முன்னெ டுக்கப்படும்” என வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.








