வவுனியாவில் பல காலமாக வங்கியிலுள்ள இலத்திரனியல் பணப்பறிமாற்றத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 4 நபர்களை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியாவில் அண்மைக் காலங்களாக வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரங்களில் பணம் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஜே.பெரேரா தலைமையில் பொலிசார் இரகசியமாக மேற்கொண்ட முயற்சியின்போது இயந்திரங்களைக்கையாண்டு அதனுள் காமராவினைப் பொருத்தி அட்டையின் இலக்கத்தினை தெரிந்து கொண்டு அதன் பின்னர் அட்டையினை தயாரித்து செயற்படுத்தி வந்த 4 சந்தேக நபர்களை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர் ஒருவரும் யாழ் வாசி ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஏ.ரி.எம். இயந்திரங்களுக்குப் பொருத்தப்படும் உபகரணங்கள உட்பட இலத்திரனியல் பொருட்கள் பலவற்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.




















