வவுனியா வேப்பங்குளம் 6ஆவது ஒழுங்கையிலுள்ள உரிமைகோரப்படாத காணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறித்த பகுதியிலுள்ள இளைஞர் கழகத்தினர் தமது விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
எனினும் கடந்த வருடம் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உடை தரித்த ஒருவர் அது தனது காணி அங்கு விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் அத்துமீறி உட்சென்றால் கைது செய்வேன் என்று தனது அதிகாரத்தில் அப்பகுதி இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது அப்பகுதியில் விளையாட்டுக்கழகத்திற்கு மைதானம் இன்றி பல அனுகூலங்களை இழந்து வருவதாகவும் தமது விளையாட்டுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறித்த மைதானக் காணியினைப் பெற்றுத்தருமாறு வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரனிடம் இளைஞர் கழகம் விடுத்த வேண்டுகளை அடுத்து இன்று காலை அப்பகுதிக்குச் சென்று காணியினைப்பார்வையிட்டதுடன் குறித்த பொலிஸ் உடையில் அப்பகுதிக்குச் சென்று இளைஞர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தொலைபேசியில் உரையாடியபோது, குறித்த மைதானம் அமைந்துள்ள காணி தனது நண்பர் ஒருவருடையது அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார் அதை பராமரிப்பதற்கு தன்னிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் பொலிஸ் உடையில் வந்து இளைஞர்களை அச்சுறுத்தியதாகவும் அதிகாரங்களை தவறான முறையில் பிரயோகம் செய்த விடயத்தினையும் சுட்டிக்காட்டியதுடன் குறித்த காணி உரிமையாளராக கூறப்படும் நண்பரை வடமாகாணசபை உறுப்பினருடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துடன் காணி அளிப்புப் பத்திரங்களையும் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியாவில் செயற்பட்ட இயக்கம் ஒன்றின் பாவனையில் முகாம் அமைத்து அக்காணி இருந்து வந்துள்ளது.
அப்பகுதியில் குறித்த இயக்கத்தினர் இடம்பெயர்ந்த பல குடும்பங்களை குடியமர்த்தியுள்ளனர். எனினும் அங்கு இருப்பவர்களுக்கு எவ்வித காணி அனுமதிப்பத்திரங்கள் எதுவும் இன்று வரை வழங்கப்படவில்லை.
குறித்த காணி மூன்று ஏக்கர் பரப்பளவினைக் கொண்டுள்ளது. குறித்த காணியினை அப்பகுதியிலிருந்து இயக்கம் வெளியேறியதையடுத்து அதனை குறித்த இளைஞர் கழகத்தினர் தமது செயற்பாட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
தற்போது பொலிஸ் உரையில் வந்த குறித்த நபர் இளைஞர்களை அச்சுறுத்தியதுடன் அப்பகுதியில் இளைஞர்களின் விளையாட்டுச் செயற்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக இதுவரை வவுனியா பொலிஸ்நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.