அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுறுவார் என பந்தயம் பிடித்த பேராசிரியர் ஒருவர், வண்டு ஒன்றை உட்கொண்டுள்ளார்.
நியூ ஜேர்ஸி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர் கலாநிதி சாம் வாங். இவர் ஒரு நரம்பியல் விஞ்ஞானியாவார்.
இம் முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக தனது இணையத்தளத்தில் நுட்பமான ஆய்வுகளை அவர் வெளியிட்டிருந்தார்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைவார் என்றே அவரும் கணித்திருந்தார். அமெரிக்க ஜனாதிபத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் கல்லூரி வாக்குகள் தேவை.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் 240 தேர்தல் கல்லூரி வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்றால் தான் வண்டு ஒன்றை உட்கொள்ளத் தயார் என சி.என்.என். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஸ்மேர்கோனிஷ்” எனும் நிகழ்ச்சியில் பேராசிரியர் சாம் வாங் கூறினார்.
இந்நிலையில், 270 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதால், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக வண்டு ஒன்றை பேராசிரியர் சாம் வாங் உட்கொண்டார்.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான சி.என்.என். “ஸ்மேர்கோனிஷ்” நிகழ்ச்சி
யிலேயே பேராசிரியர் சாம் வாங், வண்டை உட்கொண்டார். அன்றைய தினம்வரை டொனால்ட் ட்ரம்ப் 290 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத் தேர்தல் பெறுபேற்றை கணிப்பதில் ஏராளமான நிபுணர்கள் தோல்வியடைந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இதில் ஏராளமானோர் தோல்வியடைந்துள்ளனர்.
ஆனால், நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவதைப் போல் வேறு எவரும் செய்யவில்லை” எனக் கூறி வண்டை வாயில் போட்டுக் கொண்டார் பேராசிரியர் சாம் வாங்.