திருகோணமலை – கிளிக்குஞ்சு மலை பகுதியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கன்னியா காட்டுப்பகுதியில் இருப்பதாக தெரிவிக்கபடும் புதையல் பெற்றுக்கொள்ள தமது இரு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டேன்.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வாய்த்தர்கத்தில் மூவரையும் வெட்டிக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 7 மாதங்களாக எவ்வித தொழிலுக்கும் செல்லாது குறித்த சந்தேகநபர் வீட்டில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரது வீட்டுக்கு அருகில் பாரிய கல் மலையொன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் முகம் வடிவிலான உருவமொன்று காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
அந்த கல்லில் பதியப்பட்டுள்ள படத்தை சந்தேகநபர் நாள் தோறும் பார்த்து வருவதாகவும், அதிகளவில் மந்திரம் மற்றும் சூனியம் போன்றவற்றுடன் சந்தேகநபர் தொடர்புபட்டவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் புதையல் குறித்த சிந்தனையுடன் இருப்பதாகவும், இதனால் தனது பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என உயிரிழந்த பெண் தன்னிடம் கூறியதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த முக்கொலை சம்பவத்தால் திருகோணமலை – கிளிக்குஞ்சு மலை பகுதியையே நேற்றைய தினம் சோகத்தில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.