வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் கொள்ளை, வீட்டிற்குள் புகுந்து பொதுமக்களை கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தியதாக தெரிவித்து வவுனியா பொலிசாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர்கள் வடமாகாணங்களில் குறிப்பாக சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம், இராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம், கனகராயன்குளம், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுடன் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
நெடுங்கேணி, செட்டிகுளம், கிளிநொச்சி, இளவாளை போன்ற பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரை வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்த்தன தலைமையில் செயற்பட்ட குழுவினரின் தீவிர கண்காணிப்பின் பின்னர் இவர்களைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், கொள்ளையில் ஈடுபடுத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கரவண்டி, பல்சர் ரக மோட்டார் சைக்கில், கத்திகள் போன்ற பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் வடமாகாணத்தில் பல காலமாக கொள்ளை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுடதுடன் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து பொதுமக்களை அச்சுறுத்தி இரவு வேளைகளில் முகத்தை துணியால் கட்டி வீடுகளுக்குள் சென்று தங்க நகைகள், பணம், பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளதுடன் இவர்கள் கொள்ளையடித்த நகைகளை யாழ். நகைக்கடை ஒன்றிலிருந்து பன்னிரண்டு இலட்சம் ரூபா பெறுமதியானவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகளில் இவர்கள் அளித்த வாக்குமூலங்களையடுத்து பல கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுக்கு வேறு குழுக்களுடன் மற்றும் ஆவா போன்றவற்றுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்திலும் மேலதிக விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.