மாலைதீவுக்கு பாலியல் தொழிலாளிகளாக இலங்கையிலிருந்து பெண்களை ஏற்றுமதி செய்து வந்த மிகப்பெரிய வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த ஒன்றரை மாத நடவடிக்கையின் விளைவாக இச்சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்களினால் பத்தரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதியொன்றில் இருந்து, இதுவரையில் பாலியல் தொழிலாளிகளாக அனுப்பப்பட்ட பெண்களின் புகைப்படங்களும் இனிவரும் காலங்களில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பெண்கள் சிலரின் புகைப்படங்களுடன் கடவுச்சீட்டுகள் பலவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இச்சந்தேக நபர்கள் பெண் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொடுப்பனவாக வழங்கி இலங்கையை சேர்ந்த பெண்களை இவ்வாறு மாலைதீவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் 100க்கும் அதிகமான இலங்கை பெண்கள் இவ்வாறு சந்தேக நபர்களால் மாலைதீவுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைது செய்வதற்காக பணியகத்தினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.






