வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போது அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
சுத்தமான குடிநீர் இன்றியும் சுகாதாரமான மலசலகூட வசதிகளின்றியும் பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளும் இன்றி இருபது வருடமாக தமக்குரிய இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்டாமல் அகதி வாழ்வினை வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் முடிவிற்கு கொண்டவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப்பகுதி மக்களை நெடுங்கேணி சின்னஅடம்பனில் மீள் குடியேற்றம் செய்வதற்கு வவுனியா மாவட்ட செயலகம் ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இம்மாதம் இப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது மீள்குடியேற்றப்பணிகள் மேற்கொள்ள காலதாமதமாகும் என்று தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
தமக்கு சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையினை ஏற்படுத்தித்தருமாறும் பெண்கள் மலசல கூடத்திற்கு குளப்பகுதிக்கு சென்று வருவதாகவும். தற்போது மழை காலமாவதால் அங்கு விஷப்பாம்புகள் படையெடுத்து வருவதாகவும் தமக்கான மலசல கூடத்தினை அமைத்து அல்லது தற்போது பாவனையற்றிருக்கும் மலசலகூடத்தினை திருத்தி பாவனைக்குரியதாக மாற்றித்தருமாறும் சுத்தமான குடிநீர் பெற்றுத்தர ஆவண செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தமக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நேற்று துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினைப் பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் பாதுகாப்பற்ற வீடுகளிலும் இம் மக்கள் பெரும் சொல்லெண்ணாத்துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.
மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கத்தினைக்கட்டுப்படுத்துவதற்கும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் நுளம்பு வலைகளைப் பெற்றுத்தருமாறும் கோரியுள்ளனர்.
வரும் காலம் பருவ மழையிலும் இரண்டு தசாப்தகாலம் அகதிவாழ்விற்கு விடைதெரியாமலிருக்கும் இம்மக்களின் அவல நிலையினை கருத்திற்கொண்டு உதவிபுரியுமாறும் இம்மக்கள் அவலக்குரல் எழுப்பியுள்ளனர்.






























