நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களிடையே குறுகிய இனவாத கருத்துக்களை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களின் சமூக, அரசியல் மதப் பிற்புலம் அல்லது அந்தஸ்து என்பனவற்றை கவனத்திற்கொள்ளாது சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை எதிர்த்து வெ ளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எமது நாட்டில் அண்மைக் காலங்களில் காணக்கூடியதாக உள்ள நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குரோத மொழிப் பிரயோகம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டவரப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக இரத்தம் சிந்தி ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னர் முழு நாடும் ஒன்றாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கி மேற்கொள்ளும் பயணத்திற்கு இவ்வாறான நிகழ்வுகள் சவாலாக அமைவது கவலைக்குரிய விடயமாகும்.
தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் குரோத செயற்பாடுகளின் மூலம் சகோதர இலங்கை பிரஜைகளை அவமானப்படுத்தி இழிவிற்கு உட்படுத்தி இன அல்லது மத அடிப்படையில் இலங்கை சமூகத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க இடமளிக்க முடியாது.
முதன் முறையாக இந்த அரசாங்கமானது நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்தை வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளது. சகல இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலத்தில் அரச ஆட்சியாளர்களினால் இனங்களுக்கிடையில் குரோதம் மற்றும் இனவாதத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்பட்டது. அத்துடன் சகோதர இலங்கையர்களை துன்புறுத்தியதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது முற்றுமுழுதாக வேறு அணுகுமுறையாகும்.
இந்நிலையில் அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமூகம் ஓன்றைத் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பாரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இக் காலகட்டத்தில் சவால்கள் பலவற்றை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இதனிடையே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் திறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் சாதகமான சமூக – அரசியல் நிலைமைகளும் முற்போக்காகப் பாவிக்கப்பட வேண்டியவையாகும்.
ஒரே நாட்டவராக எங்களுக்குச் சொந்தமாக வேண்டிய அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பவற்றை அடைந்து கொள்ளவேண்டும் எனின் நாட்டுப்பற்றுள்ள சகல இலங்கைப் பிரஜைகளும் ஒற்றுமையுடன் தலைமைத்துவத்தைப் வழங்கி சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்பான நேர்மையான ஆட்சி முறையொன்றைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
பல்லின,பல் மதங்களைக் கொண்ட நாடாகிய இலங்கையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் உள்ள வேற்றுமையை மதித்து எங்களது செழிப்பான பன்மைத்துவத்தை பேண வேண்டும். ஒவ்வொரு பிரஜையினதும் உரிமைகளை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ள இலங்கையர்களாக பெருமைப்படக் கூடிய, சம வாய்ப்புக்களை வழங்கக் கூடிய மற்றும் அந்நியோன்னிய கௌரவத்துடன் கூடிய ஒற்றுமையான எதிர்காலத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக செயற்படுகின்றோம். அதற்காக குறுகிய, மத்திய கால மற்றும் நீண்ட காலச் செயற்பாடுகள் பல தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் குரோத மொழிப் பிரயோகம் பற்றி தங்களது பலமான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதற்கான எவ்விதமான சந்தர்ப்பங்களுக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது.
வெறுப்பு மற்றும் குரோதச் செயற்பாடுகளுக்காக மக்களை தூண்டுகின்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூகம் மற்றும் மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் மிகவும் முற்போக்கான செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம்.
மக்களிடையே குறுகிய இனவாத கருத்துக்களை பரப்புவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளும், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதோடு இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களின் சமூக, அரசியல் மதப் பிற்புலம் அல்லது அந்தஸ்து கருத்தில் கொள்ளப்படாது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இவ்வாறான குரோத கருத்துப் பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் வெவ்வேறு தரப்பினரால் சாட்சியங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான புலனாய்வுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கவனத்தில் கொண்டுவருவதற்கு விரும்புகிறோம். இந் நிகழ்வுகள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகளினால் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிலையான, மேம்பட்ட பல சமூகங்களைக் கொண்ட இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கி நாங்கள் அனைவரும் உறுதியுடன் மேற்கொள்ளும் இம் முயற்சிக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கமாட்டோம்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எந்த இனத்தினதும் இனவாத அல்லது தீவிரவாதக் குழுக்களுக்கும் இடமில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ள கூற்றுக்களை பாராட்டுகிறோம். இந் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான இம் முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு சகல இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.