(தி இந்து நாளிதழில் வெளியான ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘கிடுகிடுத்த கியூபா’ தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஒருசில மாற்றங்களுடன் இங்கே.)
கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை தனது 90 ஆவது வயதில் காலமானமை உலகின் பல பாகங்களிலுமுள்ள அவரின் அபிமானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃபுளோரிடா மாநிலத்திலிருந்து 140 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தீவு கியூபா. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ.
கியூபாவின் அதிகாரபூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்). ஸ்பானிய குடியேற்ற நாடாக கியூபா இருந்தது.
அமெரிக்காவுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான யுத்தத்தையடுத்து 1898 ஆம் ஆண்டு கியூபாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது ஸ்பெய்ன். அதன்பின் கியூபாவில் தனது இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா.
சில வருடங்களில் கியூபாவாசிகள் ஸ்பெய்னுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக்காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்கா பணிந்தது. 1902 மே 20 ஆம் திகதி அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்றது கியூபா.
ஆனால் ‘கியூபாவிலுள்ள குவாண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக் குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்’ என்பது போன்ற நிபந்தனைகளை விதித்தது.
அன்றைய அவசரத்துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது. புல்ஜென்சியோ படிஸ்டா என்பவர் சுதந்திர கியூபாவின் ஜனாதிபதியானார். தான் வைத்தது தான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்பித்தபோது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.
இதைக் கண்டு குமுறினார் ஓர் இளம் வழக்கறிஞர். குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை படிஸ்டா வரவேற்பதற்கு எதிர்ப்பு காட்டினார். படிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடுதலையானவுடன், மெக்ஸிகோவுக்குச் சென்று திட்டங்களைத் தீட் டிய அந்த இளம் வழக்கறிஞர் பிடல் கஸ்ட்ரோ!. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.
1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம்.
அரசியலிலும் அதிக ஆர்வம். தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். 1945 இல் கியூபாவின் தலைநகரிலிருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்தார்.
பிடல் கஸ்ட்ரோவும் ஒரு புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria. ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (கரீபியன் பிராந்தியத்தில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது).
இவரது அரசின் அடக்குமுறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் கஸ்ட்ரோ.
இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று ‘இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.
அப்போது பிடல் கஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார்.
கம்யூனிஸ ஈர்ப்பு
கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜோர்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது.
அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் பிடல் கஸ்ட்ரோ. தெருக்களில் வீடு வீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.
கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூப மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர்.
பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் கஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆர்டொடாக்ஸோ எனும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் பிடல் கஸ்ட்ரோ.
கியூபாவின் தலைநகரான ஹவானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிடல் கஸ்ட்ரோவுக்கு அரசியலில் ஆர்வம் அப்போதே கொழுந்து விட்டெரிந்தது.
1952இல் அங்கு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அரசை இராணுவத் தலைவர் படிஸ்டா கைப்பற்றியதால் பொதுத் தேர்தல்கள் இரத்துச் செய்யப்பட்டன.
இதன்விளைவாகவோ என்னவோ ஜனநாயகம் என்பதை ஏற்க மறுத்தார் பிடல் கஸ்ட்ரோ. ஆயுதப் புரட்சி தான் சரியான வழி என்று தீர்மானித்தார்.
1953 இல் இவரும் இவர் சகோதரர் ரவுல் கஸ்ட்ரோவும் இணைந்து படிஸ்டா அரசின் மீது தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதல் தோல்வியடைய பிடல் கஸ்ட்ரோவுக்கு15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். பின்னர் மெக்ஸிகோவுக்கு தப்பிச் சென்றார் பிடல் கஸ்ட்ரோ.
அங்கு ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த மார்க்ஸியத் தலைவர் சே குவாராவின் நட்பும், ஆதரவும் கிடைத்தது.
புரட்சி இயக்கம்
‘ஜூலை 26 இயக்கம்’ என்பது பிடல் கஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டாவுக்கு எதிரானது.
சாண்டியாகோ நகரில் இருந்த அரசின் இராணுவப் பகுதியின் மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்குதலை நடத்தியது ஜூலை 26, 1953 ஆம் திகதி. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்தது. ஆனால், இந்தத் தாக்குதல் வெற்றிகரமானதாக இல்லை என்பது வேறு விஷயம்.
படகுகளின் மூலமாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்கத்தினர் கியூபாவை அடைந்தனர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்டப்பகலில் இவர்கள் வந்து இறங்கியதால், கியூபாவின் விமானப்படை இவர்களின் மீது தாக்குதல் நடத்தியது. தவிர இந்த அணியினர் இரண்டாகப் பிரிந்துவிட்டனர்.
புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். சியெரா மாஸ் ட்ரா என்பது கியூபாவின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத் தொடர்.
இதைத் தான் தங்களது முக்கிய களமாகத் தேர்ந்தெடுத்தனர் பிடல் கஸ்ட்ரோ வும், அவரது புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும். இந்த மலைப் பகுதியில் மறைந்தபடி தான் படிஸ்டாவின் இராணுவ வீரர்கள் மீது சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
பிடல் கஸ்ட்ரோவின் இயக்கத்தில் அன்டோனியோ, ஃபிராங் பயஸ் ஆகியோரும் அந்தப் புரட்சிக் குழுவின் அபிமானத்தைப் பெற்ற தலைவர்களாக இருந்தனர்.
ஆனால் நடந்த தொடர் தாக்குதல்களில் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுவிட, இயக்கத்தின் போட்டியற்ற தலைவரானார் பிடல் கஸ்ட்ரோ.
நியூயோர்க் டைம்ஸ் இதழில் பிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல் வெளியானதும் அவரது புகழ் மிகவும் பரவியது. 1958இல் பிடல் கஸ்ட்ரோவின் இயக்கம் மேலும் வலிமை பெற்றது.
வேறுவழியின்றி இராணுவம் பின்வாங்கியது. மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்வொன்றாக புரட்சி இயக்கத்தின் கைவசமாகின. இராணுவத்தினர் இதனால் மனச் சோர்வு அடைய, கஸ்ட்ரோ புது உற்சாகம் பெற்றார்.
கியூபா நாட்டு இராணுவத்தைச் சேர்ந்தவர்களிலேயே கணிசமானவர்கள் பிடல் கஸ்ட்ரோவின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மக்களின் ஆதரவை இழந்த படிஸ்டாவை இனி ஆதரிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து விட்டது.
என்றாலும் பிடல் கஸ்ட்ரோவை அது ஆதரிக்கத் தயாராக இல்லை. தனது பிரதிநிதி கான்டில்லோ என்பவரைத் தேர்ந்தெடுத்தது. கான்டில்லோ, பிடல் கஸ்ட்ரோ வோடு ஒரு இரகசிய சமாதான உடன்படிக்கைக்கு வந்தார். (அப்போதே அவர் தந்திரமாகச் செயல் பட்டார் என்பது தான் உண்மை).
‘ஆட்சிக்கு எதிரான செயல்களை பிடல் கஸ்ட்ரோ அணி மேற்கொள்ளக் கூடாது. அமைதியான முறையில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். படிஸ்டா நிச்சயம் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்’.
இது கான்டில்லோ அளித்த வாக்குறுதி. ஆனால் நடந்ததோ வேறு. படிஸ்டாவு க்கு இரகசியத் தகவல் பறந்தது. அவர் சத்தமில்லாமல் தலைமறைவானார் கஜானாவில் இருந்த கோடிக்கணக்கான டொலர்களோடு ஸ்பெய்னுக்குச் சென்றார் என்கிறார்கள்.
கான்டில்லோவின் செயல்பாடுகள் இத்துடன் நின்றுவிடவில்லை. நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியான கார்லோஸ் என்பவரை அதிபராக்கினார். புதிய அரசு ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பிடல் கஸ்ட்ரோ கடும் கோபமடைந்தார். அவரது படை ஹவானாவுக்குள் நுழைந்து கான்டில்லோவைக் கைது செய்தது. இதற்கு இராணுவத்திலேயே இருந்த பிடல் கஸ்ட்ரோ அனுதாபிகள் உதவினார்கள்.
சேகுவேராவுடன்…
1959 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படிஸ்டாவின் அரசு முழுவதுமாக நீக்கப்பட்டது. 1959 பெப்ரவரி 16 ஆம் திகதி கியூபாவின் 16 ஆவது பிரதமரானார் பிடல் கஸ்ட்ரோ.
தற்காலிக அதிபராக மேனுவல் உருஷியா என்பவரை நியமித்தார். பிடல் கஸ்ட்ரோவின் பரம சீடர் என்றே இவரைக் கூறலாம். நாட்டில் ஊழல் குறைந்தது.
கல்வி அறிவு மேம்பட்டது. பிற அரசியல் கட்சிகள் மீது தற்காலித் தடை விதிக்கப்பட்டது. ‘நாட்டை சோஷலிசப் பாதையில் திருப்ப முயற்சித்தார். புரட்சியை அடக்கும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை படிஸ்டா அரசு கொன்று குவித்திருந்தது.
இதற்குக் காரணமானவர்களை கஸ்ட்ரோ தண்டிக்கத் தொடங்கினார். வழக்குகள் நடைபெற்றன. அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
உள்ளூரில் இதற்கு பலத்த ஆதரவு. ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இந்த வழி
முறையை ஏற்கவில்லை. கியூபாவின் பிரதமராக கஸ்ட்ரோ பதவி யேற்ற இரு மாதங்களில் 1959 ஏப்ரலில் அமெரிக்காவுக்கு அவர் விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ வீரர் அணிவதைப் போன்ற ஓர் உடை, இடது கையில் ஒரு புத்தகம், சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் – இப்படி பிடல் கஸ்ட்ரோ விமானத்திலிருந்து இறங்கியவுடனேயே பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
‘உங்களை மொஸ்கோவின் ஏஜன்ட்டாக நாங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை சரமாரியாகக் கொல்கிறீர்களே இதை எப்படி ஏற்க முடியும்?’ என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர்.
தாங்கள் தண்டிப்பதும் கொல்வதும் கொலைகாரர்களைத் தான் என்றும் அவர்கள் தனக்கெதிராக மட்டுமல்ல, நாட்டுக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் என்றும் கூறினார் பிடல் கஸ்ட்ரோ.
‘கியூபாவில் உள்ள சீனித் தொழிற்சாலைகளை தேசியமயமாக்கி விடுவீர்களா? அங்குள்ள அமெரிக்காவின் மூலதனத்தை முடக்கி விடுவீர்களா?’ என்று பறந்தது மற்றொரு கேள்வி.
பதில் சாமர்த்தியமாக வந்தது. ‘நீங்கள் நினைப்பது போன்ற கம்யூனிஸ்ட் அல்ல நான். அமெரிக்காவும், கியூபாவும் எதிரிகளுமல்ல’ என்று கஸ்ட்ரோ கூற, மகிழ் ந்து போனது அமெரிக்கா.
ஆனால் விரைவிலேயே இந்த உறவு முழுவதும் முறிந்து விழுவது போல் சம்பவங்கள் நடந்தன. மார்க்ஸிய, லெனின் பின்பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார செயல் முறையைத் தான் தாங்களும் பின்பற்றப் போவதாக கஸ் ட்ரோ 1961 ஆம் ஆண்டு அறிவிக்க, அதிருப்தியாளர்கள் உருவாயினர்.
அமெரிக்காவும் இந்த இயக்கத்துக்கு எதிர்நிலையை எடுத்தது. கோபத்தின் உச்சிக்கே போன அமெரிக்கா.
கியூபாவில் இருந்த அமெரிக்கர்களுக்குச் சொந்தமான கரும்பு வயல்களை கஸ்ட்ரோ தேசியமயமாக்கியதில் தான் முதல் பெரிய பிளவு தொடங்கியது.
கஸ்ட்ரோவின் இதுபோன்ற கம்யூனிஸ நடிவடிக்கைகளை எதிர்த்துக் கணிசமானவர்கள் கியூபாவை விட்டு வெளியேறினார்கள். 1961 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வினால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் கியூபாவைத் தாக்கினார்கள்.
பிடல் கஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்றுவது தான் இதன் நோக்கம். கியூபாவின் பே ஒவ் பிக்ஸ் (பன்றிகளின் குடா) எனும் இடத்தில் இவர்கள் தரையிறங்கினர்.
ஆனால் மூன்றே நாட்களில் கியூபா இராணுவம் இவர்களை அடக்கி விட்டது. இந்த அடக்குமுறைக்கு கியூபாவின் அப்போதைய பிரதமரான பிடல் கஸ்ட்ரோ நேரடிப் பொறுப்பேற்றார்.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமான விரோதம் அதிகமானது. கஸ்ட்ரோவின் அரசு, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான – எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தன்வசம் எடுத்துக் கொண்டது.
கோபமடைந்த அமெரிக்கா, கியூபாவிலிருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டது. உடனே, கியூபாவிலுள்ள அத்தனை வியாபாரங்களையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறிவித்தார் கஸ்ட்ரோ.
கியூபாவுடனான தனது தூதரகத் தொடர்புகளை அறுத்துக் கொண்டது அமெரிக்கா. 1976 டிசம்பர் 2 ஆம் திகதி கியூபாவின் ஜனாதிபதியாக பிடல் கஸ்ட்ரோ பதவியேற்றார்.
சீனி ஏற்றுமதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, இராணுவம் மற்றும் உடல் ஆரோக்கியத் துறைகளுக்குச் செலவழித்தது கியூபா.
இதன்காரணமாக உலகின் தலைசிறந்த சில பாடசாலைகளும், மருத்துவமனைகளும் கியூபாவில் உருவாயின. தனது நெருங்கிய நண்பனான சோவியத் யூனியனிடம் மற்றொரு உதவியையும் 1962 ஆம் ஆண்டு கேட்டுப் பெற்றது கியூபா.
அது தான் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள். அமெரிக்கா நடுங்கிவிட்டது. ‘உடனடியாக கியூபாவிடமிருந்து ஏவுகணைகளை சோவியத் யூனியன் திரும்பப் பெறாவிட்டால், போர் தான்’ என்றது அமெரிக்கா.
சோவியத் மௌனம் காக்க, சில நாட்கள் உலகமே பதற்ற நிலையில் ஆழ்ந்தது, வல்லரசுகளுக்கிடையே அணு ஆயுதப் போர் நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
கடைசியில், சோவியத் தனது ஏவுகணைகளைக் கியூபாவிடமிருந்து திரும்பப் பெற்றது. என்றாலும், பல்லாயிரக்கணக்கான தனது இராணுவ வீரர்களை கியூபாவிலேயே தங்க வைத்தது.
ஆனால், கியூபாவில் பல உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசைப் பற்றியோ, பிடல் கஸ்ட்ரோ குறித்தோ பொது இடங்களில் விமர்சனம் செய்தால் கைதும், தண்டனையும் நிச்சயம் உண்டு என்ற நிலை இருந்தது.
தங்கள் பேச்சுரிமை பறிக்கப்படுவதை விரும்பாத பலரும் அமெரிக்காவுக்குச் சென்றார்கள். இதற்கிடையே தான் சோவியத் யூனியன் உடைந்தது. ஏழை நாடாகியது கியூபா
சோவியத் யூனியனுக்கான ஏற்றுமதி மூலம் கிடைத்த நிதி ஏறத்தாள நின்றுவிட்ட நிலைக்கு கியூபா தள்ளப்பட்டபோது அமெரிக்கா சமயம் பார்த்து தனது பொருளாதாரத் தடைகளை இறுக்கியது.
கஸ்ட்ரோ பதவி இறங்கினால் தான் தடைகளை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது அமெரிக்கா. 1990களில் கியூபா மிக ஏழ்மையான நாடாகியது.
அதன்பின் கியூபாவின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மேலும் வீழ்ச்சி கண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கடல்வழியாக அமெரிக்காவுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்கினர்.
வளைந்து கொடுக்கத் தொடங்கிய கஸ்ட்ரோ
பிடல் கஸ்ட்ரோ நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்கினார்.
ஸ்பெய்னைச் சேர்ந்தவர்கள் கியூபாவில் ஹோட்டல் கள் நிர்மாணிக்க அனுமதியளித்தார். கனடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சில கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட்டார். முதல் முறையாக அங்கு வருமான வரி அறிமுகமானது. 2006 ஆம் ஆண்டு பிடல் கஸ்ட்ரோவுக்கு சத்திரசிகிச்சை நடைபெற்றது.
இதைச் செய்து கொள்வதற்கு முன் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து அந்தக் கடமைகளை இளைய சகோதரர் ரவுல் கஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
பதவியில் இல்லாவிட்டாலும் பல அரசியல் முடிவுகளை கஸ்ட்ரோ எடுத்தார். அவர் விரல் அசைவில் தான் கியூபா அரசு என்ற நிலை தொடர்ந்தது. 2008 ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதியாக ரவுல் கஸ்ட்ரோ பதவியேற்றார்.
‘கஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’
கஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளின் எண்ணிக்கை 600 இற்கும் அதிகம் என்கிறது கஸ்ட்ரோ தரப்பு. அமெரிக்கா மறுத்தது. விஷயம் சூடு பிடிக்கவே அமெரிக்க நாடாளுமன்றம் இதற்காக ஒரு குழுவை நியமித்தது.
பிராங்க் சர்ச் என்ப வர் இந்தக் குழுவின் தலைவர் என்பதால், இந்தக் குழு சர்ச் குழு என்றே அழைக்கப்பட் டது. 1960லிருந்து 1965 வரை கஸ்ட்ரோவை தீர்த்துக் கட்ட அமெரிக்க உளவுத்துறை எட்டு முயற்சிகளைச் செய்தது என்று அறிவித்தது சர்ச் குழு.
இதுவே பேரதிர்ச்சியை உண்டாக்கியது. கஸ்ட்ரோவை பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான ஃபேபியன் எஸ்கலண்டே என்பவர் அமெரிக்க உளவுத்துறை, கஸ்ட்ரோவை கொலை செய்ய 638 முறை முயன்றது என்றார்.
கியூப அரசைக் கவிழ்க்க திட்டமிட்ட இந்தக் கொலை முயற்சிகளுக்கு ‘ஒப்பரேஷன் மங்கூஸ்’ என்றும் பெயரிடப்பட்டிருந்ததாம். கொலை முயற்சி என்றால் துப்பாக்கி, கத்தி மாத்திரம் இல்லை. கஸ்ட்ரோ பயன்படுத்திய சுருட்டில் விஷம் கலந்தது ஒருவகை. அவர் ஸ்கூபா டைவிங் எனப்படும் விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர்.
இதற்கான அவர் உடையில் விஷக்கிருமிகள் நிரப்பப்பட்டன. அவரது பொல்பொயின்ட் பேனா வில் விஷம் நிரம்பிய ஒரு ஊசி இணைக்கப்பட்டது. அதனை அவர் பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட வலியே இல்லாமல் இந்த ஊசி அவர் விரலைக் குத்த, விஷம் உடலில் கலந்து விடும்.
ஒருகட்டத்தில் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அவர் செல்லும்போது அவர் காருக்கு வெடி வைக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, கஸ்ட்ரோவின் உயிர் காப்பாற்றப்பட்டது.
அடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை தன் கைக்குள் போட்டுக் கொண்டது மரிடா லொரென்ஸ் என்பவரை அவர் கஸ்ட் ரோவின் (முன்னாள்) காதலி!. பிடல் கஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத் துறை.
குளிர்காலத்துக்கான கிறீமை உடலில் தடவிக் கொள்வது கஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை கஸ்ட் ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.
ஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, கஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.
இந்தக் கொலை முயற்சிகளெல்லாம் ‘கஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’ என்ற பெயரில் சனல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பித்தார்.
1928 ஆம் ஆண்டின் பின்னர் அந்நாட்டுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார் பராக் ஒபாமா. எனினும் பிடல் கஸ்ட்ரோவை அவர் சந்திக் கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சியில் மக்கள் முன் தோன்றிய பிடல் கஸ்ட்ரோ ஆற்றிய உரையில், ‘இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்.
நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்தப் புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்’ என்றார்.
பிடல் கஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம்: தி இந்து)
பிரபலங்களுடன் பிடல் கஸ்ட்ரோ