ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரிலுள்ள 38 மாடி கட்டடமொன்றின் சுவரில், பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் என வர்ணிக்கப்படும் அலெய்ன் ரொபரட்ஸ் எவ்வித பாதுகாப்புச் சாதனங்களும் இன்றி ஏறி இறங்கினார்.
பிரான்ஸை சேர்ந்த 54 வயதான அலெய்ன் ரொபர்ட்ஸ், கட்டடங்களின் சுவர்களில் ஏறுவதில் புகழ்பெற்றவர். “பிரெஞ் ஸ்பைடர்” மேன் என இவர் வர்ணிக்கப்படுகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரிலுள்ள டொரி அக்பர் கட்டடத்தின் சுவரில் ஏறினார். 38 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் பார்ஸிலோனா நகரின் மிக உயரமான கட்டடமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கட்டத்தின் கண்ணாடிச் சுவர்களில் பாதுகாப்புச் சாதனங்கள் எதுவுமின்றி அலெய்ன் ரொபர்ட்ஸ் ஏறுவதை பொதுமக்களும் பொலிஸாரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அலெய்ன் ரொபர்ட்ஸ் அச்சம் எதுவுமின்றி இக்கட்டடத்தின் சுவர்களில் ஏறி இறங்கினார்.
இவர் உலகின் மிக உயரமான கட்டடமான துபாயிலுள்ள புர்ஜ் கலீபா கட்டடம் மற்றும் ஈபிள் கோபுரம் உட்பட 100 இற்கும் அதிகமான கட்டடங்களின் சுவர்களில் பாது காப்பு சாதனங்களின்றி ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.