வவுனியாவில் வைத்தியர்கள் இன்று (30.11.2016) காலை 8 மணி முதல் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியர்கள் சேவையில் ஈடுபடாதகாரணத்தினால் தூர இடங்களிலிருந்து வந்த நோயாளர்கள் எமாற்றமடைந்து சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்டுவரும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரை 24 மணித்தியாலங்கள் இடம்பெறுவதுடன் அவசர நோயாளர் பிரிவில் எவ்வித பாதிப்பும் இன்றி வழமையாக செயற்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாலை நேரத்தில் வைத்தியர்களினால் மேற்கொள்ளப்படும் தனியார் சேவைகளும் இன்று இடம்பெறமாட்டாது. என்று தெரிவித்ததுடன் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வரி அதிகரிப்புத் தொடர்பாகவும் 5 வயது தொடக்கம் 19 வரையான சிறுவர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட காப்புறுத்திட்டத்திலும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அதன் அனுகூலம் செல்வதாகவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பினை படம் பிடிப்பதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதி வழங்கவில்லை அதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






