திருகோணமலையில் பேருந்து தீக்கிரை!!

824

bus

திருகோணமலை 4 ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – திருகோணமலை சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, உரிமையாளரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 01.00 அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் பின்புறச் சில்லில் மூட்டப்பட்ட தீ காரணமாகவே பேருந்து முழுமையாக எரிந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உப்புவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வீதி விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு தண்டப்பணமாக 5 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் குறித்த திட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதுடன் மாத்தறை, பாணந்துறை, வவுனியா, தம்புள்ளை, புத்தளம், கண்டி, திருகோணமலை, குளியாப்பிட்டி, தங்கொட்டுவ, தம்பதெனிய, யக்கல, பயாகல, கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீதும் அடையாளந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.