டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருப்போரிடம் 25000 ரூபா அபராதம்!!

839

dengu

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருப்போரிடம் அறவிடப்படும் அபராதம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் எவரேனும் உயிரிழந்தால், நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர் அல்லது நிறுவனத்திடம் இருந்து நட்டஈடு அறவிடப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கான கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சென்ற போதே அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 30 டெங்கு அபாய வலையங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே இந்த வருடத்தில் மாத்திரம் 47,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 76 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.