மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ராஜாஜி ஹோலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு காலை முதல் லட்சக்கணக்கானோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணியுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தப்பட்டு சவப்பெட்டியில் ஜெயலலிதாவின் உடலை மூடும் நடைமுறைகள் முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் பூத உடல் ஏற்றப்பட்டு அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும்.
இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. உடல் செல்லும் வழியின் இரு புறமும் மக்கள் நின்று கொண்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அண்ணா சாலை அண்ணா சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்று கொண்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அணிவகுத்து நடந்து செல்கின்றனர்.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அண்ணசாலையெங்கும் குவிந்துள்ளனர்.
ஹெலிகொப்டர்கள் மூலமாகவும் இறுதி ஊர்வலம் கண்காணிக்கப்படுகிறது. சுமார் 3,000 துணை ராணுவப் படையினர் இறுதி ஊர்வலப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.