வவுனியா மாவட்டத்தில் 22500 ஏக்கரில் நெற் செய்கை ஆரம்பம்!!

363

paddy

வவுனியா மாவட்டத்தில் இம் முறை பெரும்போக நெற் செய்கை 22500 ஏக்கரில் இடம்பெற்றுள்ளதாகவும் மழை வீழ்ச்சி இன்மை காரணமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஆர்வம் குறைந்து காணப்படுவதாகவும் எனினும் சில தினங்களில் பருவமழை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் விவசாயிகள் ஆர்வத்துடன் நெற் செய்கையில் ஈடுபட முன்வருவார்கள் என்றும் கமநல உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்..

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் நெற் செய்கையினை ஆரம்பித்துள்ளனர். காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களில் தண்ணீர் இன்றி காணப்படுவதனாலும், வவுனியா மாவட்டத்தில் மழையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவும் இம் முறை விவசாயிகள் நெற் செய்கை மேற்கொள்வதற்கு ஆர்வம் இன்றி காணப்படுகின்றார்கள்.

தற்போது நெற் செய்கையினை மேற்கொண்டவர்களுக்கு மானிய அடிப்படையில் அரசாங்கத்தினால் ஐந்து ஏக்கருக்கு 25000 ரூபா மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் நெற் செய்கையினை ஆரம்பித்தபோதும் பசளை பெற்றுக் கொள்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பசளை வீசவேண்டிய காலத்தில் வீசமுடியாமல் போயுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

இதற்கு கருத்துத் தெரிவித்த கமநல உதவி ஆணையாளர், காலதாதம் ஏற்படுவதற்கு நாம் பொறுப்பல்ல. உரிய நேரத்தில் விண்ணப்பப்படிவங்களை பயனாளிகள் சமர்ப்பிக்காத காரணத்தினால் காலதாதம் ஏற்பட்டுள்ளது.

இருந்தும் மானியத்தினைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் ஆர்வம் காட்டி வருகின்றோம். இலங்கையில் எப்பாகத்திற்கும் இன்னும் மானியம் வழங்கப்படவில்லை.

விவசாய அமைச்சர் அலுவலகத்திலிருந்து மானியம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அடுத்த கிழமைக்குள் பயனாளர்களின் வங்கியில் மானியத்திற்கான பணம் வைப்பிலிடப்படும் என்றும் கமநல உதவி ஆணையாளர் தெரிவித்தார்.