தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப்பெண்.
பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ.ச.தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணியம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக்கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாகராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும் , சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற்றது.
பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ். தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இயற்றியவர்.
மிக பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப்பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருகபூபதி.
இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஒரு நூலக அலமாரி போல அலங்கரிக்கப்பட்ட அற்புத மேடையில் திருமண நிகழ்வை தொகுத்தார் ச.தமிழ்செல்வன்.
நல்லக்கண்ணு தாலி எடுத்து பிரேமிடம் தர அவர் சிந்துவின் கழுத்தில் கட்டினார். அப்போது ச.தமிழ் செல்வன் தாலி என்பது பெண்ணடிமை சின்னம் ஆனால் ஒரேயடியாக சமூகத்தை மாற்றிவிடுவது சற்று சிரமம்.
எனவே அதேசமயம் ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் மணமகனுக்கு தற்போது சிந்து தாலி சூட்டுவார் என கூற பிரேம் ஆனந்த் கழுத்தில் சிந்து ஒரு செயினை கட்டினார்.
பின் மனமக்களை ஒருவருக்கு ஒருவர் தலையில் கொட்டிக்கொள்ள சொன்னார். பின் இருவரும் அதை ஒருவருக்கொருவர் மாறி மாறி தேய்த்து கொள்ள சொல்லி பின் சிரித்தபடி கைகுலுக்க சொல்ல அப்படியே செய்தனர் மணமக்கள்.
பின் பேசிய ச.தமிழ்செல்வன் ஒவ்வொரு திருமணத்தின் போதும் பழைய சடங்குகளை உடைத்து புதிய சடங்குகளை அறிமுகம் செய்து வருகிறோம் அப்படிப்பட்ட ஒரு சடங்குதான் இது.
தாம்பூல பையாக அனைவருக்கும் மூன்று நூல்கள் பரிசளிக்கப்பட்டது.
இந்த வித்தியாச திருமணம் வந்தவர்கள் நெஞ்சில் சமத்துவ விதையை விதைப்பதாக இருந்தது.