நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!!

963

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் நாட்டிற்குள் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை போதியளவு கிடைக்காமையினால், பெரும்பாலான குளங்களுக்கு போதியளவு நீர் கிடைக்கவில்லை. அதனால் நாட்டின் நீர் நிலைகளின் நீர்மட்டம் 30 தொடக்கம் 35 வீதமாகவே காணப்படுகின்றது.

பராக்கிரம சமுத்திரம், இகினிமிடிய, தெதுறு ஓயா, லுணுகம்வெஹர மற்றும் மின்னேரியா ஆகிய நீர்த்தேக்கங்களில் 50 வீத நீர்மட்டமே காணப்படுகின்றது.

கவ்டுல்ல, கந்தளாய், ராஜங்கனை, பதவிய மற்றும் மஹகனதராவ ஆகிய குளங்களின் நீர் மட்டம் 30 தொடக்கம் 35 வீதமாக காணப்படுவதாக நீர்பாசனத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

நிலவும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக 40 விவசாயப் பண்ணைகளில் மாத்திரமே தற்போது பயிற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

50 தொடக்கம் 60 வீதமே தற்போது பயிற்செய்கையை முன்னெடுக்க முடியும் என நீர்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியது.

பெரும்போகத்தில் 8 இலட்சம் ஏக்கரில் பயிற்செய்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இம்முறை 2 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் காணியிலேயே முன்னெடுக்க முடிந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டது.