வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக அநாதரவாக நின்றிருந்த 12 வயதுடைய சிறுவன் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக அநாதாரவாக 12 வயதுடைய சிறுவன் நின்று கொண்டிருப்பதாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக செயற்பாட்டாளர் சிறுவனிடம் வினவியபோது, தனது பெயர் சண்முகலிங்கம் சதீஸ்குமார், வயது 12, தொட்டிலடி, ஒட்டிசுட்டானிலிருந்து வந்ததாகவும்
தனது சகோதரன் தன் மீது தாக்குதல் மேற்கொண்டபோது வீட்டிற்கு சொல்லாமல் பேருந்தில் ஏறி வவுனியாவிலிருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், உறவினரின் வீட்டிற்குச் செல்வதற்கு வழி தெரியாமல் நின்றிருந்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
சிறுவனது இடது கையில் முறி காயம் ஏற்பட்டு கை கட்டுடனும் மேலங்கி அற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளார்.
அதையடுத்து வவுனியா இலுப்பையடியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள அதிகாரியிடம் சிறுவன் உடனடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளான் என தெரியவருகின்றது.